Sunday, January 15, 2012

நீலகேசி காட்டும் வேத தரிசனம்

தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்1 போல், ஐஞ்சிறுங்காப்பியங்கள்2 என்ற
பகுப்பும் உண்டு. இவ்வைஞ்சிறுங்காப்பியங்களில் நீலகேசியும் ஒன்று. நீலகேசி தருக்க (வாதம்) வகையைச் சார்ந்த நூல். தருக்க நூலாக இருந்தாலும், ஒரு காப்பியத்திற்குண்டான இலக்கணக் கூறுகளை
தம்மிடத்தே கொண்ட ஒரு தத்துவ நூலாகவும் திகழ்கிறது. நீலகேசி
என்பவள் ஒரு சூத்திர பெண். அவள் சமண முனிவரான முனிசந்திரர்
என்பாரிடம் நூல் கற்று, சமண சமயக் கருத்துக்களை நாடு முழுதும் பரப்ப
முனைகிறாள். அவ்வாறு நாடு முழுதும் திரிந்து எல்லாச் சமயங்களையும்
மறுத்து நின்று வாது செய்துச் சமண சமய மேன்மையை நிலை நிறுத்துகிறாள்.
இந்நூல் பெளத்த சமயத் தர்க்க நூலான குண்டலகேசி என்னும் நூலை மறுக்க,
செய்யப்பட்ட நூல் என்றுக் கருதுவாரும் உளர்.

நீலகேசியார்,

1. குண்டலகேசி வாதச் சருக்கம், அருக்க சந்திரவாதச் சருக்கம்,மொக்கலவாதச் சருக்கம் மற்றும் புத்தவாதச் சருக்கம் ஆகிய சருக்கங்களில் பெளத்தத் தரிசனத்தையும்,
2. ஆஜிவகவாதச் சருக்கத்தில் ஆசிவகம் என்னும் அவைதிகத் தரிசனத்தையும்.
3. சாங்கியவாதச் சருக்கத்தில் சாங்கியத் தரிசனத்தையும்,
4. வைசேடிகவாதச் சருக்கத்தில் வைசேடிக தரிசனத்தையும்,
5. வேதவாதச் சருக்கத்தில் வேத தரிசனத்தையும் மற்றும்
6. பூதவாதச் சருக்கத்தில் சாருவாகம் என்றும் உலகாய்தம் என்னும்
தரிசனத்தையும்

மிக நயமாக மறுத்து, ஆருகதத் தரிசனத்தின் மேன்மையை விளக்குகிறாள்.
நீலகேசி எழுந்த காலத்தில்3 வேத தரிசனத்தின் கூறுகள் எவ்வாறிருந்தன என்பதும், வேதத்தை எவ்வாறு அணுகினார்கள் என்பதையும் நுணுகிப் பார்க்கும்போது நம் கண்முன் தோன்றும் காட்சிகள் தற்போது நம் அனைவருக்கும் பெருவியப்பை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவேயாம்.

வேதவாத சருக்கம்


”காதம் பலவுங் கடந்தபின் காகந்திக் கடிநகருள்
வேதமு மங்கமும் விச்சைக ணிலைமையும் வேண்டுநர்கட்
கோதவுங் கேட்பவு முரைத்தலி நனுலகினு ளறியப்பட்டான்
பூதிக னெனப்படு மந்தண னோத்திடம் புக்கனளே” – 824

அத்தினாபுரத்தில் இருந்து புறப்பட்டு, வெகுதூரம் பயணித்து காகந்தி4 என்னும்
நகரை அடைகிறாள் நீலகேசி. அங்கு பூதிகன் என்ற வேத பார்ப்பனத்
தலைவனை சந்தித்து நுமது பொருள் (சித்தாந்தம்) யாது என வினவுகிறாள்.

அதற்கு, பூதிகன் இவ்வாறுக் கூறுகிறான்:

”என்னை யிங்குநும் பொருளென வினவலு மிவ்விருந்த
வன்னைதன் வரவிதே லாதியி லருமறை யதுமுதலாப்
பின்னைவந் தனகளு மிவையெனப் பையவே பெயர்த்துரைத்தான்
முன்னமங் கிருந்தவோர் முதுமக னவைதன் முறைமையினே” - 825

வேதம்5 எமக்கு முதனூல். அது அனாதியானது. அவற்றிலிருந்து பல
மெய்நிலைகள் உண்டானது என்றும் இவை எல்லாமே வேதத்தை
அடிப்படையாகக் கொண்டு விளங்குபவை என்றும் மறுமொழிக் கூறுகிறான்.

அதற்கு நீலகேசியார் இவ்வாறு சொல்கிறாள்:

”நாத்திக மல்லது சொல்லலை யாயின்மு னான்பயந்த
சாத்திர மாவது வேதமன் றோவது தான்சயம்பு
சூத்திரி நீயது வல்லை யலாமையிற் சொல்லுகிலாய்
போத்தந்தி யோவதன் றீமையென் றான்பொங்கிப் பூதிகனே” - 826

உங்கள் வேதநெறி கடவுள் மறுப்பு6 சார்பானது. எல்லாம் அறிந்த ஒரு
இறைவனை ஏற்பதன்று. ஆயினும், பல கடவுள்களை வழிபடும் நெறிகளை இவ்வேதத்திலிருந்து வந்ததாகக் கூறுகின்றாய். அப்படியாயின், பிந்தியவை
சிறந்ததென கொள்வாயாயின், கடவுள் மறுப்புக் கொள்கையைப் போற்றும்
வேத நெறியை விட்டுவிடுவது தானே? என்று மறுமொழிக்கூறியதைக்
கேட்ட பூதிகன் கடுஞ்சினத்துடன், யாரைக் கடவுள் மறுப்பாளர் என்கிறாய்?
எங்கள் வேதம் யாராலும் உரைக்கப்பட்டதன்று (அபெளருக்ஷேயம்) என்ற
நிலையை உன்னால் அறிய முடியாது. அதனைக் கற்கும் தகுதி சூத்திரி7யாகிய
உனக்கு இல்லை. அறியாத, அறியமுடியாத ஒன்றை ஆராய்ந்துரைக்க உனக்கு
உரிமை எங்ஙனம் வந்தது? என்று வெகுண்டு கேட்கிறான் பூதிகன்.

(இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும். நீலகேசி எழுந்தக் காலத்தில்
நால்வருணத்தாரில் கடைசிப் பிரிவினரான சூத்திரர்களுக்கும் அவற்றிலும்
புறம்பான பஞ்சமர் என்றுப் பிரிவுனருக்கும், பெண்களுக்கும் வேதம் பயில்வது
தடைச் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீலகேசியின் மூலம் நாம் அறியலாம்.)

இதற்கு அவர்கள் நூலிலிருந்தே அவற்றுக்கு ஆதாரம் கொடுக்கிறாள் நீலகேசி.
அதற்கு, பூதிகன், சரி போகட்டும், நீ வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறாய். தெய்விகமென நாங்கள் கொள்ளும் அவ் வாய்மொழிகளுள் நீ யாதேனும் குறைகாட்ட முடியுமா? என்றதற்கு,

நீலகேசியார் இவ்வாறு பதிலுரைக் கூறுகிறாள்:

”ஏராளமாகக் காட்டமுடியும். வேதங்கள் மனிதர் வாய்மொழி என்பதற்கு
அவ்வேதப் பாடல்களே சாட்சியாகயிருக்கின்றன. அப்பாடல்களில் பல
நடைமுறைக்கு ஒத்துவராதவை. பொய்யுரைகள் மலிந்தவை. கீழ்வகை
உலக ஆவல்களையே அவைகள் வற்புறுத்துகின்றன. தீநெறிக்கு ஊக்குவிக்கின்றன. கொடுமை, கீழ்மை ஆகியவற்றுக்குத் துணைப் புரிகின்றன” என்று பகர்கிறாள்.

அதற்கு, பூதிகன் நீ சொல்லிய உரைகள் எவ்வாறு பொருந்தும்?

“ மனிதர்கள் வழங்கும் மொழியில் காணப்படும் அதே வகையான பிறப்பு, நடை, சொல், எழுத்து ஆகியவற்றால் அமைந்து, தெய்வநூல் என்று போற்றுதற்குஉண்டான சிறந்த பண்புகள் ஏதும் இல்லாதிருப்பதனால் அது மனிதர் செய்த நூலே.

மேலும், “மஹாதோ பூதஸ்ய நிஸ்வாஸிதம்” என்று குறிப்பிடுவதாலும்,
வேதங்களில் ஒன்று தித்திரியால் கூறப்பட்டதலாலும் அவைகள் தைத்திரியம் எனப்பட்டதாலும் இவைகள் யாவும் மனிதனால் எழுதப்பட்டது தெரிகிறது” என்று மறுமொழிக் கூறுகிறாள் நீலகேசி.

உடனே பூதிகன், சிறு, சிறு பகுதிகள் அவ்வாறு சொல்லப்பட்டாலும், வேதங்கள் யாரால் எப்போது அருளப்பட்டன என்று கூறப்படவில்லையே. பிற நூல்கள் அவ்வாறு குறிக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், வேதங்கள் தொடக்கமற்றவை, தெய்வீகச் சார்புடையவை என்பது பெறப்படுகின்றது என்கிறான்.

சளைக்காத நீலகேசி


நீலகேசியாரும் சளைக்கவில்லை! பதிலுக்கு,

”தொடக்கமறியப்படாததால் ஒரு பொருள் தொடக்கமற்றது என்று கருத
முடியாது. பொது மக்களிடையே வழங்கும் எத்தனையோ பழமொழிகள்
யார் இயற்றியவை? எப்போது இயற்றப்பட்டவை என்று அறியப்பட
முடியாதவை. ஆயினும், அவைகள் மனிதர் ஆக்கியவையன்றித்
தெய்வீகமல்ல என்பது உறுதி, தெளிவு. பின்னையும், மனிதர்கள்
புற்றிலிருந்தும், கலத்திலிருந்தும், நிலத்திலிருந்தும், விலங்கிலிருந்தும்
பிறந்ததாக வேதம் கூறுவது, நடைமுறையறிவுக்குப் பொருந்தாதவை.
இந்திரனும், சூரியனும் முறையே ஆண்பாலாகிய அருணனை மருவி,
வாலி சுக்கிரிவரைப் பெறுதல், இந்திரன் தன் குறியிழந்து ஆட்டுக்கடாவின்
குறியை ஒட்டப்பெறுதல் ஆகியவை அறிவுக்குக் பொருந்தாக் கதைகள்,
அவற்றில் இடம் பெறுகின்றன.

இவையெல்லாம், வாழ்க்கைக்கு எவ்வளவு முரண்பட்டது?

மேலும், குருடன் விழுந்த மணியை பொறுக்குதல், விரலற்ற முடவன் அவற்றை மாலையாகக் கோத்தல், கழுத்தற்ற மனிதன் அவற்றை அணிதல் ஆகிய முழுப் பொய்யுரைகள் வேதங்களில் மலிந்திருக்கின்றன. இவை நடவாச் செயல்கள் மட்டுமல்ல; நடக்க முடியாத செயல்கள். ஞானக் காண்டத்தில் எல்லாம் கடவுள் (பிரமம்) என்றும் பன்மைத் தோற்றமும் வேற்றுமையும் மயக்கத் தோற்றம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால்,

கர்ம காண்டத்தில் வேள்வி, உலக அவாக்கள் புகழப்பெறுகின்றன. இவைகள் ஒன்றுக்கொன்று முரணான கூற்றுக்கள். ரிஷிக்கள் ஆடு, மாடு, யானை போன்ற பரிசுகள் பெறுவது உலக அவாவிலழுந்தியவர்கள் என்று காட்டுகிறது. யாக்ஞவல்கியர் சனகரிடம் தாம் வேள்வியில் முனைவது உண்மையறியும் அவாவாலன்று; காணிக்கை பெறும் நோக்கத்துடன் மட்டுமே
என்று ஒத்துக்கொள்கிறார்.

பின்னையும்,

உங்கள் வேதத்தில் குடி, ஊனுண்ணல், சிற்றின்பம் ஆகியவைகள் விரவிக்
கிடக்கின்றன. செளத்ரமணி வேள்வியில் ரிஷிகள் குடித்துவிட்டு ஆடுவதே
தலைமையான நிகழ்ச்சி. வேள்விகளில் உயிர்கள் கொல்லப்படுவது மட்டுமின்றி அவற்றின் ஊனும் உண்ணப்படுதல் கட்டாயமாகும். பிள்ளையின்றேல் வீடில்லை என்ற எச்சரிக்கையினால் பெளண்டரம் முதலிய வேள்விகள் செய்யப்படுகின்றன. இதில் கற்பிழத்தல் ஒரு நற்செயலாக்கப்படுவதனால் சிற்றின்பமும் ஒழுக்கக்கேடும் சமய ஆதரவு பெறுகின்றன.

அம்மட்டோ,

வேதங்களில், பின்னாளில் பல தெய்வங்களை சேர்த்து அவர்களை
வணங்குவதுடன் நில்லாது, பல இடங்களில் பல தெய்வங்களைத் தனித்தனி
முழுமுதற் கடவுள்கள் எனக் கூறிப் படிப்பவர் மனத்தில் மயக்கத்தையும்
குழப்பத்தையும் உண்டு பண்ணுகின்றன. பல அடிப்படைக் கருத்துக்கள்
பலபொருள்படக் கூறப்பட்டுள்ளன. பல்வேறு திறத்தாரால் பலவாறாக பொருள் கொள்ள இடம் தந்து, அவைகள் மயங்கவைத்தல் என்ற குற்றத்தின்
பாற்படுகின்றன.

எடுத்துக்காட்டாக “அஜேநயஷ்டவ்யம்”8 என்னும் தொடரில் அஜம் என்பதற்கு
ஆடு என்று ஒரு சாராரும், முளைத்தல் வலிவற்ற வறுத்த தானியம் என்று
மற்றொரு சாராரும் பொருள் கொள்ளும் படியாகவிருக்கிறது. இம்மயக்கம்
உபரிசரவசுவின் கதையில் தெளிவாக விளங்குகிறது” என்று சொல்லித்
தொடருகிறாள்.

மகாபாரதம் சாந்தி பருவத்தில் உபரிசரவசு கதை கூறப்படுகிறது. பிருகஸ்பதி
(வியாழ பெருமான்) தலைமையில் இந்திரனால் நடத்தப் பெற்ற வேள்வியில்
குருவான வியாழன் வேள்விக்காக ‘மாவினால் செய்த விலங்கு’ செய்யும்படி
கூறுவது கேட்டு, ஊனுண்ணும் விருப்புடன் வேள்விக்கு வந்த தேவர்கள்
வெகுள, முனிவர்கள் வியாழனையே ஆதரிக்க, இருவரிடையேயும் நடுவராக
அமர்ந்த அரசன் வசு, அகசான்றுகளையும் மீறித் தேவர்ப் பக்கம் தீர்ப்பளித்து நரகடைந்தான்.

மேலும்,

இக்கதைச் சமணர் கோட்பாட்டை நினைவூட்டுகிறது. வேத வேள்விகள்
“மா அரிசி” முதலிய படைப்புகளாலேயே முனிவர்களால் தொடக்கத்தில்
செய்யப்பட்டன என்றும் ஊனுணவு பிற்காலத்தில் ஏற்பட்டுத்தப்பட்டு
தூய்மை கெட்டதென்றும் சமணர் கொள்கின்றனர். மகாபாரதக் கதை
சமணர் கோட்பாட்டை வலியுறுத்துகிறது என்பதில் ஐயமில்லை” என்கிறாள்
நீலகேசியார்.

பூதிகன் உடனே, நன்று! உங்கள் சமயத்துக்கு வேதத்தில் ஆதாரங்
காட்டுவதானால் உங்கள் இறைவனாகிய அருகன் அதில் குறிப்பிடப்பட
வேண்டும்? என்கிறான்.

பூதிகன் கேள்வியை முடிக்கும் முன்னரே, ஆம் ரிக்வேதத்திலேயே உண்டு!

”கொல்வது தீதெனப் பொருவழி வேள்வியிற் கொலப்படுவ
வெல்லையொன் றிலவென்ப லிணைவிழைச் சொழிகென்ப வம்முகத்தாற்
செல்கதி யுளதென்ப தீர்த்திக நெறியென்றுந் தீயவென்று
பல்லவர் துணிவுமெம் வேதத்தி னுளவெனப் பயின்றுரைப்ப” - 833




என்று வேதத்தில் இருந்து எடுத்துக் காட்டி மேலும் தொடருகிறாள்.

“எல்லா மக்களும் (இறைவன்)9 நான்முகனிடமே பிறந்ததாகக் கூறும் நீங்கள்
உயர்வு தாழ்வு கற்பிப்பதேன்! தலையில் பிறத்தல் உயர்வும் காலில் பிறத்தல்
இழிவும் எனின், கடவுளாகிய நான்முகன் உடலிலே உயர்வு தாழ்வு ஏற்படுமோ?

உங்கள் நூல்களிலேயே விஷ்ணு தலையில் பிறந்த வியர்வை தீயதாகவும்
காலில் பிறந்த கங்கை தூயதாகவும்; உந்தியிற் பிறந்த நான்முகன் தெய்வமாகவும், காதுகளில் பிறந்த மது கைடபர் தீயோராகவும் கூறப்பட்டிருக்கிறேதே?

வேதங்களை வரையறையின்றிப் புகழும் நீங்கள் உங்கள் கொலை வேள்விக்கே இடம் தேடுகிறீர்கள். வேதங்கள் முன்னோர்கள் நூலாக மட்டும் கொள்ளும் நாங்கள், அதனைப் பழிக்காமல் அதன் பெயரால் நடைபெறும் தீமைகளையே பழிக்கிறோம்!!. என்னை? என்று பூதிகப் பார்ப்பானுக்கு நீலகேசி என்ற சூத்திரப் பெண் பாடம் புகட்டுவதாக நீலகேசி என்ற நூல் வேதவாத சருக்கத்தை முடிக்கிறது.

நீலகேசி காட்டும் செய்திகள்

1. வேதம் அபெளருக்ஷேயம். (சுயம்புத் தன்மை)
2. ஆதிவேதத்தில் முழுமுதற் கடவுள் கொள்கை இடம் பெறாமை.
3. வேதத்தில் வேள்வியில் உயிர்ப் பலியிருந்தமை.
4. வேத ரிஷிகள் கள் போன்ற மதுபானங்களை குடித்தமை.
5. வேத ரிஷிகள் பரத்தையரைக் கூடுவது.
6. பெரிய தெய்வங்களாக இந்திரன், வருணன், வாயு மற்றும் அக்னி
ஆகியோர்களை கூறியிருப்பது.
7. சிறு தெய்வங்களாக ருத்திரன், விஷ்ணு ஆகியோர்களை கூறியிருப்பது.
8. வேதத்தில் சமண தீர்த்தங்கரரான ஜினேஸ்வரன் பற்றியக் குறிப்புகள் இருப்பது.
9. வேதத்தில் முரணான கொள்கைகள் இருந்தமை.

போன்ற செய்திகள் நீலகேசி வாயிலாக நமக்கு தெரியவரும் சில
கருத்துக்களாம். இன்று ’இந்து மதம்’ என்று அறியப்படும் மதம்,
முற்காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை அறிய,  நமக்கு பெரும்
வியப்பாகவிருக்கிறது!

(சிறு விளக்கம்: நீலகேசியில் சில பாடல்களே இக்கட்டுரையில் எடுத்துக்
காட்டியிருக்கிறேன். பின்னர் சமயம் கிடைக்கும்போது இரண்டாவது பாகமாக அவற்றை எடுத்து எழுதுகிறேன்)


இரா.பானுகுமார்,
சென்னை

=================================================================================

குறிப்புகள்:

1. சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி மற்றும் மணிமேகலை – ஐம்பெரும் காப்பியங்கள்

2. சூளாமணி, யசோதர காவியம், நீலகேசி, நாககுமார காவியம் மற்றும் உதயணகுமார காவியம் – ஐஞ்சிறுங்காப்பியங்கள்

3. கி.பி.ஒன்றாம் நூற்றாண்டு - நீலகேசி – பேராசிரியர். அ,சக்கரவர்த்தி நயினார், பக்கம் 6.

4. காகந்தி – காவிரிப்பூம் பட்டினம் – மணிமேகலை – (22)37

5. வேதம் என்ற சொல்லுக்கு அறிவு என்பது பொருள் – இந்தியத் தத்துவம் – ஓர் அறிமுகம் – பக்கம் 91.

6. வேதத்தை ஒட்டி எழுந்த முதற்தரிசனம் மீமாம்சை ஆகும். ஜைமினி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் இப்பிரிவு வேதத்தை பிரமணமாகக் கொண்டது. இவற்றை பூர்வ மீமாம்சம் என்றும் அழைப்பர். இது கடவுள் மறுப்புக் கோட்பாட்டைக் கொண்டது. பின்னாளில் இந்த மீமாம்சத்தில் இறைக் கோட்பாட்டைப் புகுத்தி உத்தர மீமாம்சை என்ற புதுப் பிரிவை உண்டாக்கினார்கள். - இந்தியத் தத்துவம் – ஓர் அறிமுகம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா

7. “சனாதமக் கொள்கையின்படி, வேதம் என்பது பரிபூரண ஞானத்தின் களஞ்சியம் ஆகும். இந்த வேதங்களைப் பயில்வது தாழ்ந்த சாதி மக்களுக்கும் மகளிரிக்கும்* சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டு வந்திருக்கிறது. - இந்தியத் தத்துவம் – ஓர் அறிமுகம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா – பக்கம் 93
(* Sankhyayana Grhya Sutra iv.7.47; Vasista Dharma Sastra xviii.12; Manusmrthi iv.99)

8. Story of Uparichara Vasu – Neelakesi, Prof.A.Chakravarthy, Page.no.313-314

9. மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிரத்தல், செல்வ மீட்டல், ஏவல் புரிதல் என்ற கட்டுப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர்.” - மனுதர்மம் - உயிர்களின் தோற்ற அதிகாரம் – பாடல் – 31

Saturday, January 14, 2012

குறளும் சமணமும் - பன்மொழிப் புலவர். ஜகநாத ராஜா - 4






குறளும் சமணமும் - பன்மொழிப் புலவர். ஜகநாத ராஜா - 3






குறளும் சமணமும் - பன்மொழிப் புலவர். ஜகநாத ராஜா - 2






குறளும் சமணமும் - பன்மொழிப் புலவர். ஜகநாத ராஜா - 1






திருக்குறளாசிரியர் சமயம்

திருக்குறளாசிரியர் சமயம்

- தமிழ்ப் பண்டிதர். டீ.ஆர். ஸ்ரீநிவாச சாரியார்



தமிழ் இலக்கியத்தில் சிறப்புற்றோங்கி வளரும் குறள் என்ற நீதி நூலைத்
தமிழ் நாட்டில் அறியாதவர் அறியாதவரே ஆவர். இந்நூல் அறம் பொருள்
இன்பம் என்னும் விஷயங்களின் பாகுபாட்டையும் அதனால் அடையும்
பயன்களையும் தெளிவாய்க் கூறுகின்றது. ஆரியருக்கு மனுதர்ம சாஸ்திரம்
சுக்கிர நீதி முதலிய நீதி நூல்கள் எவ்வாறு முக்கியமானவைகளோ,
தமிழருக்கு இந்நூலும் அப்பேர்ப்பட்டதே. இத்தகைய சிறப்பு வாய்ந்த
நூலை யியற்றியவர் யார்? அவர் எக்காலத்தவர்? அவர் சமயம் யாது?
என்பவைகளைப் பற்றிச் சுருக்கமாய் ஆராய்வோம்.

குறளின் நூலாசிரியர் திருவள்ளுவர் என்பர். அவர் கடைச் சங்க காலத்திற்கு
முன்னே இருந்தவர் ஆவர். இக்கடைச் சங்கமோ ஒன்றாவது இரண்டாவது
நூற்றாண்டில் இருந்ததாகத் தமிழ் ஆராய்ச்சி வல்லவர்கள் தக்க நியாயங்களைக்
கொண்டு ஸ்திரப்படுத்தி யிருக்கின்றார்கள். ஆகையால் வள்ளுவர் காலமும் 1,
2 நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே என்று ஏற்படுகின்றது. ஏனெனில் சங்கப்
புலவர்களாகிய நக்கீரர், நல்லந்துவனார், கபிலர், பாணர் முதலானோர்
இத்திருக்குறளின் கருத்திக்களையும் அடிகளையும், அடிகளின் தொடர்களையும்
கையாண்டு இருக்கிறார்கள். இம்மட்டோ! சைவ சமயாசாரியர்களான அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் முதலானவர்களும், வைணவ சித்தாந்த தேசிகர்களாம்
நம்மாழ்வார் முதலிய ஞானாசரியர்களும் குறட்பாக்களை
யெடுத்தாண்டிருக்கிறார்கள்.

இனி அவர் சமயத்தைப் பற்றி ஆராய்வோம்.

இவர் இன்ன சமயத்தினர் என்று துணிந்து கூறுவதற்குத் தகுந்த சான்று
இல்லை என்பார் ஒரு சாரார்; மற்றொரு சாரார் இவரைச் சைவர் என்பர்.
அவர்கள் அப்படிக் கூறுவதற்குக் ‘கடவுள் வாழ்த்தில்’ குறளாசிரியர்
“எண்குணத்தான்” என்ற சொற்றொடரை உபயோகப்படுத்தியிருப்பதாலும்,
அச்சொற்றோடர் சிவபிரானுக்குத்தான் பொருந்தியுள்ளது என்றும் அவர்கள்
கொண்ட கொள்கைக்கு காரணங் காட்டுவர். மற்றும் அவர்கள் கூறும்
மற்றொரு காரணம் ஒளவை அவர் தமக்கையாம்; அவள் சிவபக்தனாம்.
ஆகையால் இவரும் சிவபக்தராய்த்தான் இருந்திருப்பாராம். ஏதொ ஒரு
தனிப்பாடலில் “பூவில் அயனும் புரந்தானும்” என்று கூறிச் சிவனைப்
புகழ்ந்திருக்கிறாராம். அதுவும் அவரது சைவ சமயத்தைத் தெளிவாய்க்
கூறுகின்றது என்றும் உரைப்பர். இத்துடன் நில்லாமல் “நாயனார்” என்ற
பட்டம் சிவபக்தருக்குத்தான் உரியது என்றும் இவரும் அப்பட்டத்தை
வகித்ததால் இவர் சைவ சமயியாய்த்தான் இருக்கவேண்டுமென்றுங்கூறி
வாதிடுவர்.

இம்மூன்று கொள்கைகளும் நியாய வாயிலாக யோசிக்குமிடத்து ஒன்றும்
நிலைக்கு நில்லா. “எண் குணத்தான்” என்ற சொற்றொடர் சிவனை
மாத்திரமா குறிக்கின்றது? விஷ்ணுவையும் “எண் குணத்தான்” என்று
திருச்சந்த விருத்தம் முதலிய வைணவ நூல்கள் கதறுகின்றனவே!
அருகரையும் “எண் குணத்தான்” என்று அருகநூல் சாதிக்கின்றது.
ஆனால் கடவுள் வாழ்த்தில் “எண் குணத்தான்” என்றும், “மலர்மிசை
யேகினான்’ என்றும், “பொறிவாயிலைந் தவித்தான்” என்றும், “பகவன்
வேண்டுதல் வேண்டாமை இலான்” என்றும், “அறவாழி அந்தணன்”
என்றும் வரும் சொல்லையும் சொற்றொடர்களையும் உபயோகப்படுத்துவதாலும்
அவைகள் அருகருக்கே உரியவை யென்று நிகண்டு முதலிய நூல்கள்
சான்று கூறுவதாலும் “எண் குணத்தான்” என்று குறளில் வழங்கியிருப்பது
அருகரைக் குறித்தே அல்லாமல் சிவனைக் குறித்து அல்ல.
“ஒளவையார் சைவர், அவர் தம்பியாகிய இவரும் சைவர்” என்பதும்,
“பூவில் அயனும்” என்ற ஒருதனிப்பாட்டையும் இதற்கு அனுகுணமான
ஓர் ஆதாரமற்ற கதையையும் மேற்கோளாகக் காட்டுவதும் ஒப்புக்
கொள்ளத்தக்கன அல்ல. ஏனெனில் குறளில் எங்கேயாவது சிவனையாவது
சைவ வழிப்பாட்டைப் பற்றியாவது கூறியிருக்கின்றாரா? மருந்துக்கும்
காணோமே!

இதுபோக வைணவர் இவரை வைணவர் என்று கூறுவர். இதற்குக் காரணம்,
இவர் குறளில் “தாமரைக் கண்ணான் உலகு” என்று உபயோகப்படுத்தியிருப்பதால் அத்தொடர் விஷ்ணுவைத்தான் குறிக்குமே யல்லாது, மற்றத்தெய்வத்தைக்
குறிக்காது என்ற பிடிவாதக் கொள்கைதான். “தாமரைக் கண்ணான்” என்ற
சொற்றொடருக்கு இந்திரன் என்ற பொருளிலும், கம்பர் பலதடவையில்
உபயோகப்படுத்தி யிருக்கிறார். ஆகையால் வைணவர் கூற்று உபயோகமற்ற
கூற்றாய் முடிகிறது.

பெளத்தர் என்றாலோ, பெளத்தர்கள் ஜீவனில்லை மறுபிறப்பில்லை
என்கிறார்கள். கொல்லாமை, புலால் மறுத்தலை இவர்கள் வெறுக்கவில்லை.
ஜீவன் உண்டு என்றும், மறுபிறப்பு உண்டென்றும், கொல்லாமையையும்
புலால் மறுத்தலையும் குறளில் வற்புறுத்தி யிருக்கிறார். ஆகையால்
வள்ளுவர் பெளத்தர் ஆகார்.

ஆனால், இவர் சமணர்தான் என்று சொல்வதற்குத்தக்க நியாயங்கள்
உள்ளன. கடவுள் வாழ்த்தில் பகவன், அறிவன், மலர்மிசை ஏகினான்,
இறைவன், ஐந்தவித்தான், அறவாழி அந்தணன், எண்குணத்தான்
என்று அருகக் கடவுளுக்குப் பெயராக வழங்கும் சொற்களை
உபயோகப்படுத்தியிருப்பதும், அருகசரணம், சித்தசரணம், சாது சரணம்,
தர்மசரண்ம் என்ற ஜைன சமயத் துதியாகிய நான்கிற்கும் பதிலாகக்
கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்திக்
கூறுதலாலும் இவர் சமணரே என்க. இவர் அருகனைக் குறிக்கும்
சொற்களையே சிலப்பதிகாரம், சிந்தாமணி, நிகண்டு முதலியவற்றிலும்
கூறிருப்பதும் காண்க:- “அறிவன், அறவோன், அறிவரம்பிகந்தோன்”,
“செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்”, “இறைவன்”,
எண் குணத்தான்” ஐவரை வென்றோன்”, மலர்மிசை நடந்த மலரடி”—
சிலப்பதிகாரம்.” பகை நண் போடிப்பான்” –சிந்தாமணி “அறவாழி அந்தணன்”
–திவாகரம், ஆயினும் சிலர் “உலகியற்றியான்” அந்தணர் நூல்
“மறப்பினும் ஒத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்”
“அறு தொழிலோர் நூன் மறப்பர்” என்று திருக்குறளில் வழங்கியிருப்பதைக்
கொண்டு சமணக் கொள்கையை மறுக்க எழுவோர் பரிமேலழகர் வைதீக
மதக் கொள்கைகளையும் கதைகளையும் யுக்திக்குத்தகுந்தவாறு புகட்டி
வலிந்து பொருள் கொள்வதை ஆராய்ச்சி செய்யாதவரேயாவர். ஆனால்,
சமணக் கொள்கைகளையும் கதைகளையும் ஆதாரமாகக் கொண்டு சொல்
கடந்த வழியே பொருள் நோக்கினால் பரிமேலழகரே வலிந்து பொருள்
கொண்டாரென்று தெரியும்.

தொல்காப்பியச் சூத்திரத்தில் “வினையினீங்கிய” என்ற செய்யுளுக்கு
பொருத்தமான பொருள் நோக்கில் வினையில் கொஞ்ச காலம்
சம்பந்தப்பட்டிருந்து பின்பு நீங்கிய அறிவையுடையவன் இறைவனாகும்
என்று புலப்படுகிறது. இவ் வடைமொழிகள் அருகருக்கு பெருந்தி
இருப்பதுபோல மற்ற தெய்வங்களுக்குப் பொருந்த வில்லை. ஜைனர்
கொள்கைப் பிரகாரம் அருகர் வினையிலே சிலகாலம் கிடந்து பிறகு
அதனின்று நீங்கி அறிவையடைந்து விளங்கினார் என்றும் மற்ற
தெய்வங்களுக்கு வினையே இல்லையென்றும் புராணங்கள் கூறுகின்றன்.
ஆகையால் தொல்காப்பியர் மதமும் ஜைனம் என்றே தெளிவாகின்றது.

சுபம்!

திருக்குறள் ஆசிரியர்

- விஜய நகரம் மகாராஜா கலாசாலையில் சரித்திர போதகாசிரியராகிய
ஸ்ரீமான் எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார் (1920ல் எழுதியது)

திருக்குறளுடைய ஆசிரியர் எந்தமதத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு
பெரிய கேள்வியாகவிருந்து வருகிறது. அவ்வாசிரியர் ஜைநரென்று
சில பெரிய வித்வான்கள் உறுதியாகக் கூறுகின்றார்கள். அவர் ஹிந்து
தெய்வம் எதையும் வணங்கா திருத்தலும் மலர்மிசை யேகினான்,
எண் குணத்தான் என்று கடவுளைக் குறிப்பிடுதலுமே அவர் ஜைநர்
என்று கூறுவதற்குப் போதுமான ஆதாரங்களென்று கருதப் படுகின்றன.
ஜைநர்கள் தங்களுடைய ஆசார்யர்களுள் ஒருவரான ஏலாச்சாரியார்
என்பவர் குறளை இயற்றியதாக நம்புகிறார்கள். பழைய சிறந்த தமிழ்க்
காப்பியங்களுள் ஒன்றாகிய நீலகேசி என்னும் நூலினுடைய
உரையாசிரியராகிய சமயதிவாகர வாமன மாமுனிவர் தமது உரையில்
திருக்குறளைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் அதை “எம்மோத்தாதலால்”
(எமது வேதம் ஆகையினால்) என்று எழுதி யிருக்கின்றார்.
இந்தக் கொள்கை உண்மையானால் ஜைநர்கள் கி.பி. முதல்
நூற்றாண்ட்டில் தென்னாட்டில் பிரவேசித்துத் தங்கள் மதத்தைத்
தமிழ்ப் பாஷை மூலமாக வெளியிட ஆரம்பித்தனரென்று ஊகிக்கலாம்.

ஜைநர்கள் பெரிய வித்யார்த்திகளாய் இருந்தது மல்லாமல்
புத்தகங்களை எழுதுபவருமாய் இருந்தனர். அவர்கள் நூற்களையும்
சாஸ்திரங்களையும் ஸ்வபாவ மாகவே நேசித்து அவைகளை விருத்தி
பண்ணும் முயற்சி யுடையவர்கள். தமிழில் ஜைநர்கள் செய்யப்
பட்டிருக்கும் நூல்கள் தமிழர்களுடைய ஐஸ்வர்யங்களுள் மிகவும்
விலையுயர்ந்தவை. இலக்கண, இலக்கிய விரோதங்களில்லாமல்
சமஸ்கிருத சொற்களைத் தமிழ்ச் சொற்களோடு கலந்து உபயோகிக்கும்
முறையைக் காட்டியவர்களும் அவர்களே. கன்னட நூற்களும்
ஜைநர்களுக்கு ஏராளமாகக் கடன்பட்டிள்ளன. உண்மையில்
அவைகளை முதலில் எழுதியவர்களும் இவர்களே. இங்கு
(L.Rice) எல். ரைஸ் என்பவர் எழுதுவது கவனிக்கத் தக்கது;
அதாவது: “பன்னிரண்டாவது நூற்றாண்டின் மத்தியகாலம் வரையில்
கன்னட நூற்கள் முழுமையும் ஜைநர்களுடையவையே. ஜைந
நூற்களே பின்னும் நீண்ட காலம் வரையுல் உயர்ச்சி பெற்று வந்தன.
கன்னட பாஷையில் மிகப்பழமை யானவையும், அதிக மேன்மை
தங்கியவுமான நூற்களேல்லாம் ஜைநர்களுடையனவே” என்பதே.
இன்னும், ரவரண்ட் கிட்டல் என்பவரும் இம்மாதிரியே கூறுகிறார்;
அதாவது: “ஜைநர்கள் தங்கள் சமூகத்திற்காக எழுதியது மல்லாமல்,
சாஸ்திரங்களின் மேலுள்ள இச்சையினாலும் அநேக நூற்களை
எழுதி யிருக்கின்றனர். சில சமஸ்கிருத நூற்களைக் கன்னடத்தில்
பொழிபெயர்த்து மிருக்கின்றனர்.” என்பதே.

உன்னதமான அஹிம்ஸா விரதம் ஹிந்து வேதாந்த
ஆசாரங்களைச் சரிப்படுத்தி இருக்கிறது. ஜைந உபன்னியாசங்கள்
காரணமாகப் பிராமணர் மிருகபலியை நிறுத்தி அதற்குப் பதிலாக
யாகங்கள் செய்யும் பொழுது மாவினால் மிருகங்கள் செய்து
உபயோகப் படுத்து கின்றனர்.

விக்ரக ஆராதனையும் தேவாலய நிர்மாணமும்
தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஜைநர்களினாலேயே ஏற்பட்டன.
சைவகோயில்களில் சந்நியாசிகளைக் கும்பிடுவது ஜைநப் பழக்கத்தில்
நின்று நேராகவே கடன் வாங்கப்பட்டிருக்கின்றது. ஜைநர்களா லேற்பட்ட
மற்ற எல்லாத் திருத்தங்களை விட மேலானவை, திராவிடர்களுடைய
ஞான, நீதி, அபிவிருத்திக்குக் காரணமா யிருந்தனவும், ஜைந
கல்விக் கழகங்களுக்கும் பிரசாரங்களுக்கும் போட்டியாக
ஏற்படுத்தப்பட்டனவுமான பாடசாலைகளேயாம்.

சுபம்!